இந்திய அணிகள் ஏமாற்றம்: ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் ஏமாற்றின.

பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் தடகள போட்டிக்கான 4x400 மீ., தொடர் ஓட்டம் நடந்தது. பெண்கள் பிரிவில் 8 அணிகள், 2 பிரிவுகளாக தகுதிச் சுற்றில் பங்கேற்றன. 'பி' பிரிவில் களமிறங்கிய இந்திய அணியில் சுபா வெங்கடேசன், ஜோதிகா ஸ்ரீ தண்டி, வித்யா ராம்ராஜ், பூவம்மா ராஜு இடம் பெற்றிருந்தனர். இலக்கை 3 நிமிடம், 32.51 வினாடியில் கடந்து 8வது இடம் பிடித்த இந்தியா, ஒட்டுமொத்தமாக 15வது இடத்தை கைப்பற்றி பைனல் வாய்ப்பை இழந்தது.

ஆண்கள் பிரிவில் 8 அணிகள், இரு பிரிவுகளாக தகுதிச் சுற்றில் விளையாடின. 'பி' பிரிவில் விளையாடிய இந்திய அணியில் முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேக்கப் இடம் பிடித்திருந்தனர். பந்தய துாரத்தை 3 நிமிடம், 00.58 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்த இந்தியா, ஒட்டுமொத்தமாக 10வது இடத்தை கைப்பற்றி பைனலுக்கு தகுதி பெறத்தவறியது.

இருப்பினும் இந்திய அணி நடப்பு சீசனில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தது. ஒருவேளை இந்திய அணி, 'பி' பிரிவில் 'டாப்-3' அல்லது ஒட்டுமொத்தமாக 'டாப்-8' வரிசையில் இடம் பிடித்திருந்தால் பைனலுக்கு தகுதி பெற்றிருக்கலாம்.

Advertisement