'ஆம்லெட்'டில் கரப்பான் பூச்சி; ஏர் இந்தியா பயணி கொந்தளிப்பு

4

புதுடில்லி: ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட, 'ஆம்லெட்'டில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்த விமான பயணி அதிர்ச்சி அடைந்து வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


டில்லியை சேர்ந்தவர் சுயிஷா சாவந்த். இவர் தனது 2 வயது குழந்தையுடன் நியூயார்க் நகரத்துக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லியில் இருந்து சென்றார். விமான பயணிகளுக்கு ஆம்லெட்டுடன் கூடிய மதிய உணவு கொடுக்கப்பட்டது. அதனை வாங்கி சுயிஷா தனது குழந்தைக்கு ஊட்டியபடி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது 'ஆம்லெட்'டில் ஒரு கரப்பான் பூச்சி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதையடுத்து, அவர் அலறி அடித்து கொண்டு விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தார். அவர்கள் பதில் அளிக்காமல் மவுனம் காத்தனர். ஆத்திரமடைந்த சுயிஷா, தனது மொபைல் போனில் ஆம்லெட்டில் கரப்பான்பூச்சி இருந்ததை வீடியோவாக எடுத்து கொண்டார்.

நியூயார்க் நகரில் விமானம் தரையிறங்கிய உடனேயே ஏர் இந்தியா நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதற்கு ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டது.


ஆனாலும் சுயிஷா கோபத்தில், 'ஆம்லெட்'டில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, 'டில்லியில் இருந்து நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் எனக்கு பரிமாறப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்தது. இதை நாங்கள் கண்டுபிடித்தபோது எனது 2 வயது குழந்தை என்னுடன் பாதிக்கு மேல் உணவை சாப்பிட்டு முடித்தது.


இதனால் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டார்' என குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.

Advertisement