'மேட் இன் இந்தியா' பொருட்களை வாங்குங்க; 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மோடி வேண்டுகோள்!

2

புதுடில்லி: 'வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மக்கள் அனைவரும் 'மேட் இன் இந்தியா' பொருட்களையே வாங்க வேண்டும்' என 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.


'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்றைய மன் கி பாத் எபிசோட் உணர்ச்சிகரமானது. நிகழ்ச்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மக்கள் தங்கள் உள்ளூர் மொழிகளில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியை கேட்டனர் என்று கூறுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.



மழைநீர் சேமிப்பு




கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் பஞ்சம் வரும் சமயத்தில் சமாளிக்க உதவும். 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் செயல்முறை எனக்கு கோவிலுக்கு சென்று கடவுளைப் பார்ப்பது போன்றது. சமூக உணர்வோடு சமுதாயத்தில் ஆற்றும் பணிகள் மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றப்படுகின்றன.


மதுரை ஆசிரியருக்கு பாராட்டு




புதுச்சேரி கடற்கரையில் தூய்மை குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மாஹே நகராட்சியை சேர்ந்த ரம்யா என்பவரின் குழுவினர் கடற்கரையை தூய்மைப் படுத்துகின்றனர். மதுரையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற ஆசிரியை தனது வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார். அவரது தந்தையை பாம்பு கடித்த போது மூலிகைச் செடிகளை பயன்படுத்தி உயிரை காப்பாற்ற முடிந்தது. ரம்யா, சுபஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டுக்கள்.


கலைப்பொருட்கள்




அமெரிக்க ஜனாதிபதி பைடன், நம் நாட்டில் இருந்து அந்த நாட்டுக்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட டெரேகோட்டா, கற்கள், தந்தம், மரம், காப்பர், வெண்கலத்தால் செய்யப்பட்ட நமது கலைப்பொருட்களை திரும்ப வழங்கினார்.

நமது பண்டைய கலைப்பொருட்களை அமெரிக்காவிடம் திரும்பப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் பண்டிகை காலக்கட்டத்தில் மக்கள் 'மேட் இன் இந்தியா' பொருட்களை வாங்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement