கோவையில் வங்கதேசத்தினர் ஊடுருவல்; தடுப்பதற்கு கடும் நடவடிக்கை அவசியம்!

2

கோவை: தொழில்வளமிக்க கோவை மாவட்டத்துக்குள், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக ஊடுருவுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கோவைக்கு பணி நிமித்தமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்காேனார் வருகின்றனர். நிரந்தர பணி அமைந்ததும், குடும்பத்தினரோடு கோவையில் தங்குகின்றனர். அதனால், 'ரியல் எஸ்டேட்' துறையும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.


வட மாநில தொழிலாளர்கள் போர்வையில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், நமது நாட்டுக்குள் ஊடுருவி, கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் தங்கியிருக்கின்றனர். ஆரம்பத்தில் கட்டுமானத் துறையில் மட்டும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.
அவர்கள், கட்டுமான நிறுவனங்களின் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இப்போது, அனைத்து விதமான நிறுவனங்களிலும் பரவி இருக்கின்றனர்.


இவர்களில் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் யார்; வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில், போலீசார் இடையே குழப்பம் இருக்கிறது. புரோக்கர்கள் மூலமாக நியமிப்பதால், ஆவணங்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. இந்த விஷயத்தில், போலீசார் அலட்சியப்போக்கையே கடைபிடிக்கின்றனர்.

திருப்பூர் தந்த பாடம்




சமீபத்தில் திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில், ஆதார் அட்டைகள் போலியானதாக கண்டறியப்பட்டது. ஆகவே, கோவையிலும் ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.


தொழிலாளர் நலத்துறை மூலமாக, வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது. அதில், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.


அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் தங்கியிருந்தால், நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து, முனைப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.



'தொழிலாளர் விபரம் அறிய அணுகலாம்'

கோவை சரக டி.ஐ.ஜி., சரவண சுந்தர் கூறியதாவது:கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சட்ட விரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என அடிக்கடி சோதனை மேற்கொள்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்து கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் இருப்பவர்கள் விபரம் பெறப்படுகிறது. வடமாநில தொழிலாளர்களின் விபரம் தொழிலாளர் நலத்துறை வாயிலாக சேகரிக்கப்படுகிறது.


தங்களது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் குற்றவழக்குகள், ஆட்சேபகரமான நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களா என்பதை அறிய, காவல்துறை அலுவலகத்தில் தொழில் நிறுவனத்தினர் கட்டணம் செலுத்தி அறிந்து கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து வைத்திருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement