ஹிஸ்புல்லா தலைவருக்காக பிரசாரத்தை ரத்து செய்த மெக்பூபா முப்தி; 'முதலை கண்ணீர்' என பா.ஜ., விமர்சனம்

13


ஜம்மு:ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தை மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெக்பூபா முப்தி ரத்து செய்ததற்கு பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.

மேற்காசியாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்தப் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அண்மையில், பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையால் தாக்கி கொன்றது. இதன்மூலம், கடந்த 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா அமைப்பால் ஏற்பட்ட தொல்லைகளுக்கு முடிவு கட்டியுள்ளதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

இதனிடையே, ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் சிலர் பேரணி நடத்தினர். அதேபோல, இன்று நடைபெற இருந்த தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பி.டி.பி., கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று (செப்.,28) அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், லெபனான் மற்றும் காசா மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்கள், இது அரசியல் நாடகம் என்று விமர்சித்துள்ளனர்.

பா.ஜ.,வின் கவீந்தர் குப்தா கூறுகையில், " வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படும் போது அமைதியாக இருக்கும் மெகபூபா முப்திக்கு, ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் வலியை கொடுத்துள்ளது. இது எல்லாம் முதலைக்கண்ணீர். போலியான அனுதாபத்தை உண்டாக்குகிறார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்," எனக் கூறினார்.


காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றொரு பா.ஜ., தலைவர் அல்தப் தாகூர் கூறுகையில், "மதத்தை வைத்து அரசியல் செய்கிறார். இது அவரது அரசியல் நாடகம். போரில் மக்கள் கொல்லப்படுவதை நாங்களும் தான் எதிர்க்கிறோம். முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, மெகபூபா முப்தி இதுபோன்று பேசி வருகிறார்," எனக் கூறினார்.

Advertisement