பொறாமை கொள்ளாத ஒரே இனம் ஆசிரியர்கள் மட்டுமே அமைச்சர் கணேசன் பெருமிதம்

விருத்தாசலம், : முதல்வர்களுக்கெல்லாம் ரோல்மாடலாக விளங்குகிறார் ஸ்டாலின் என, அமைச்சர் கணேசன் பேசினார்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

இந்தியாவிலேயே வியக்க வைக்கும் அளவிற்கு விளையாட்டுத்துறையை முன்னேற்றி, மாணவர்களை இளமை பொலிவோடு வைத்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி.

அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் வழங்கி, இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கு ரோல்மாடலாக விளங்குகிறார் ஸ்டாலின்.

மார்ச் 1ம் தேதி 'நான் முதல்வன் போர்டல்' உருவாக்கப்படுகிறது. அதில், எங்கு என்ன படிக்கலாம், கல்லுாரி, அதற்கான அரசு உதவிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அறியலாம்.

கல்வி கற்பதற்கு முன் ஒழுக்கம், அடக்கம், பணிவு தேவை. கடவுளுக்கு இணையானவர்கள் ஆசிரியர்கள்.

அவர்களுக்கு உங்கள் மீது பொறாமை கிடையாது; நீங்கள் எந்த அளவுக்கு உயர்ந்தாலும், பொறாமை படாத ஒரே இனம் ஆசிரியர்கள் மட்டுமே.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கண்ணீர் விட்ட அமைச்சர்

விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவரான சினிமா பாடகர் வேல்முருகன், அவரது பள்ளி கால சுவாரஸ்யத்தை பகிர்ந்துவிட்டு, தாய் பாசம் குறித்து ஒரு பாடலை பாடினார். இதை கேட்ட அமைச்சர் கணேசன் கண்ணீர் விட்டு அழுதார்.

Advertisement