'பசுமை சாம்பியன் விருது' பெற அழைப்புதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


'பசுமை சாம்பியன் விருது' பெற அழைப்புதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


நாமக்கல்:'பசுமை சாம்பியன் விருதுக்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஆண்டுதோறும், 'தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது' வழங்கப்படுகிறது. இப்பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு, 100 பேருக்கு, தலா, 1,00,000 ரூபாய் வீதம் பண முடிப்பும் வழங்கப்படும்.
கீழ்கண்ட தலைப்புகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு, 'தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது' வழங்கப்படும்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய பணிகளில் ஈடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட, பசுமை சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த, 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யும்.
இதற்கான விண்ணப்ப படிவம், தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய இணைய தளத்தில் www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்., 15 கடைசி நாள் ஆகும்.
கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நாமக்கல் என்ற முகவரியில் அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement