தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு

புதுச்சேரி; வில்லியனுார் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்த 2 தொழிற்சாலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

புதுச்சேரி அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்ற 15 வகையான பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும், இத்தகைய பொருட்களை சில தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதாக மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்திற்கு புகார் வந்தன.

அதன்பேரில், மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் வழிகாட்டுதலின்படி, வில்லியனுார் தாசில்தார் சேகர் தலைமையில் வருவாய் அதிகாரிகள் நாகராஜன், பார்த்திபன், கிராம நிர்வாகிகள் முருகையன், குணசேகரன், மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் அறிவியல் அதிகாரி செல்வநாயகி, உதவி அறிவியல் அதிகாரி விமல்ராஜ் அடங்கிய குழுவினர் வில்லியனுார் 'ரோகித் பாலிமர்', ராமநாதபுரம் 'வேலு பாலிமர்' ஆகிய இரண்டு தொழிற்சாலைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இரண்டு தொழிற்சாலைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகள் உற்பத்தி செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, தொழிற்சாலைகளில் இருந்த 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் தலைவர் ஜவகர் ஒப்புதலோடு, இரண்டு தொழிற்சாலைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement