திட்டங்களை முழுமையாக தயார் செய்தால் தான் நிதி கிடைக்கும்: வைத்திலிங்கம் எம்.பி., அட்வைஸ்

புதுச்சேரி,; புதுச்சேரி அரசு துறைகளில் செயல்படுத்தப்படும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். எதிர்கட்சி தலைவர் சிவா, செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் வைத்தியநாதன், நேரு, சம்பத், ஆறுமுகம், லட்சுமிகாந்தன், பாஸ்கர், சிவசங்கர், தலைமை பொறியாளர் தீனதயாளன், உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல், மின் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், மீன்வள துறை இயக்குநர் இஸ்மாயில், நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சுரேஷ் மற்றும் முக்கிய அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வைத்திலிங்கம் எம்.பி., பேசியதாவது: மத்திய அரசு, கடந்த காலங்களில் துறை வாரியாக நிதி அளித்து வந்தது.

தற்போது, அப்படி இல்லை. திட்ட அறிக்கை அனுப்பினால் தான், நிதி அளித்து வருகின்றனர். இதனால், திட்டங்களுக்கான அறிக்கை தயாரிப்பில், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு முழு திட்ட அறிக்கையை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விஷயத்தில், புதுச்சேரி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ரூ.20 ஆயிரம் கோடிக்கு திட்டம் தயாரித்து அனுப்பினால் தான், ரூ.4 ஆயிரம் கோடிக்கு, மத்திய அரசு அனுமதி தரும். நீங்கள், ரூ.4 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை தயாரித்து அனுப்பினால் ரூ.1,000 கோடி தான் கிடைக்கும்.

இதேபோல், திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், எந்த பணியை எடுத்துக்கொள்ளவதிலும், கண்டறிவதிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும் அதை செயல்படுத்தும் போதும் தாமதம் ஏற்பட்டது.

எனவே, ஒரு திட்டத்தை தயாரிக்கும்போது, முழுமையானதாக தயார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

130 திட்டங்கள்: செல்வகணபதி எம்.பி., தகவல்

இக்கூட்டத்தில், செல்வகணபதி எம்.பி., பேசும்போது, மத்திய அரசின் உதவியுடன், புதுச்சேரியில் 130 திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், புதுச்சேரி அதிகாரிகள், காலத்தோடு எதையும் செய்வதில்லை என்று, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த அவப்பெயரை நீக்கும் வகையில், நமது அதிகாரிகள், விரைவாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement