புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் வைப்பதில் பா.ஜ.,விற்குள் போட்டி

புதுச்சேரி; புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்ட, பா.ஜ., வினர் இரு கோஷ்டிகளாக வலியுறுத்துகின்றனர்.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையம் கடந்த 1980ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்பு 1992ம் ஆண்டு விரிவாக்கம் செய்து, ராஜிவ் காந்தி பஸ் நிலையம் என பெயர் சூட்டினர்.மக்கள் தொகைக்கு ஏற்ப, பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதிற்கு பதில், தற்போது, பஸ் நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி மதிப்பில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இதற்கு, புதுச்சேரி நகராட்சி ராஜிவ்காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு பஸ் முணையம் என பெயர் பலகை வைத்தனர். கடைகள் ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு, நீதிமன்றவரை சென்றது. ஆன்லைனில் ஏலம் விட்டு, கடைஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கடை ஒதுக்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, கடைகளை திறக்காமல், பஸ் நிலையத்தை மட்டும் திறக்க ஏற்பாடு நடக்கிறது. இதையறிந்த ஆளும் கூட்டணியை சேர்ந்த பா.ஜ., வினர், மத்திய அரசு நிதியில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளதால், தங்கள் தலைவர்களின் பெயர் வைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பா.ஜ., வின் ஒரு தரப்பினர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்க வேண்டுமென, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்தனர்.

பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு எம்.எல்.ஏ., சிவசங்கரன் தரப்பினர், பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் சூட்ட வேண்டும் என் சட்டசபை நோக்கி பேரணி வந்து வலியுறுத்தினர்.

பா.ஜ., வினருக்குள்ளேயே இரு கோஷ்டிகளாக போட்டி போட்டு வலியுறுத்துவது, ஆளும் தரப்புக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement