கரும்பு சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மூங்கில்துறைப்பட்டு; டிராக்டரில் ஏற்றிச் சென்ற கரும்பு, தேசிய நெடுஞ்சாலையில் சரிந்ததால் போக்குவரத்து பாதித்தது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பியில், நேற்று மாலை கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிய டிராக்டர் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து சாலையில் கொட்டியது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.

வட பொன்பரப்பி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கரும்புகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

மூங்கில்துறைப்பட்டில் இயங்கும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கரும்புகளை டிராக்டர், லாரி, மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி வருகின்றனர்.

இந்த வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கரும்புகளை ஏற்றி வருவதால் தினமும் சாலையில் கரும்புகள் கொட்டி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் ஓவர் லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement