சசி தரூர் விவகாரம்; கேரளா காங்., நிர்வாகிகளுடன் கட்சி தலைமை நாளை ஆலோசனை

புதுடில்லி: சசி தரூரால் கேரள காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு நிலவி வரும் நிலையில், நாளை (பிப்.,28) ஆலோசனை நடத்த மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து நான்காம் முறையாக தொடர்ந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா., சபையில் உயர் பதவி வகித்த சசி தரூர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்ததை வரவேற்றார். அதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்த போது, 'நம் நாட்டின் நலனை மனதில் வைத்தே பேசினேன். ஒரு அரசியல்வாதி எப்போதுமே, தான் சார்ந்த கட்சியை மனதில் வைத்து பேச முடியாது' என விளக்கம் அளித்தார்.
அந்த சர்ச்சை அடங்கிய நிலையில், இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் கூறினார். ஆளும் இடதுசாரிகள் குஷியான நிலையில், காங்கிரசார் கடுப்பாகினர்.
இதற்கு சசிதரூர் விளக்கம் அளித்த போதும், எனினும், கேரள காங்கிரஸ் தலைவர்கள், தொடர்ந்து சசிதரூரை விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து, சசிதரூர் கூறியதாவது: காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன, எனக் கூறியிருந்தார்.
கேரளா காங்கிரஸில் தலைமை சரியில்லை என்றும் சசி தரூர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்பியது; ஆனால் காங்கிரசின் வெவ்வேறு கோஷ்டித்தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில், சசி தரூர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, கேரளாவைச் சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகிகளை டில்லிக்கு வருமாறு காங்கிரஸ் கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சசி தரூருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சசி தரூர் கூறுகையில், "அழைப்பின் பேரில் நாளை நடக்கும் கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன். பார்ப்போம், என்ன நடக்கிறது," என்று கூறினார்.
கேரளாவின் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் மேலிடம் முனைப்பு காட்டி வருகிறது.






மேலும்
-
தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது: முதல்வர் ஸ்டாலின் பதிவு
-
மருத்துவமனையில் அமைச்சர் ராமசந்திரன் அனுமதி
-
ஆடையை களைந்த போலீஸ்காரர் ஸ்டேஷனில் ரகளை; பெண் போலீசார் ஓட்டம்!
-
இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: மயிலாடுதுறையில் அதிர்ச்சி
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!
-
சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?