தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உடைக்கப்பட்ட சென்டர் மீடியன் வழியாக வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம் உள்ளது.

விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு அருகே ரூ. 20 கோடி மதிப்பில் நாட்ச் இந்தியா நிறுவனம் சார்பில் 750 மீட்டர் துாரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்காக தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள விளை நிலத்தில் கட்டுமான பொருட்களின் யார்டும், அதற்கு எதிர்திசையில் மண் யார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கட்டுமான பொருட்களை, மேம்பாலம் கட்டுமானம் நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்ல, 2 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் நிறுவனம், கட்டுமான பொருட்களை யார்டில் இருந்து, பாலம் கட்டும் பகுதிக்கு எளிதாக கொண்டு செல்வதற்காக, யார்டுகள் எதிரே சாலையில் உள்ள சென்டர் மீடியனை உடைத்து, வழி ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதையை, சுற்று வட்டார மக்களும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், பள்ளிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதனை அறியாமல் வெளி மாவட்டங்களில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள், இப்பகுதியை கடக்கும்போது, விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

இதனை தவிர்க்க, மேம்பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை பலகை மற்றும் சாலையின் இருபுறமும் பேரிகார்டு வைக்க போலீசார் மற்றும் நகாய் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement