குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்

2

சென்னை; இளம் தலைமுறையினரிடையே வன்முறை கலாசாரம் அதிகரித்து வருகிறது. குற்றச்சம்பவங்களில், 18 வயதுக்கு குறைவான சிறார்கள் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு பின், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு மாணவர்களிடையே அதிகரித்துள்ளதால், பல வினோத விஷயங்களை சிறுவர்கள் அதன் வாயிலாகவே கற்றுக் கொள்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். சிலரை இன்னும் மீட்க முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது, பிறந்த நாள் கேக் வெட்டினால் கூட, அரிவாளால் வெட்டுவது பேஷன் என, இளைஞர்கள் நினைக்கின்றனர். அதேபோல், பைக் வீலிங் பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில், ஆயுத வடிவிலான எழுதுபொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது, பெற்றோரை கவலை அடையச் செய்துள்ளது. பெங்களுருவில் இருந்து சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ள பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்கள், பல வித துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.


ஏற்கனவே, மாணவர்களில் சிலர், பள்ளிகளுக்கு கத்தியுடன் வந்து, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வேளையில், இதுபோன்ற ஆயுத வடிவிலான எழுதுபொருட்களை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டியது அவசியமாகும்.

தடை விதிக்க வலியுறுத்தல்




இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

இளம் வயதிலேயே மனதில் விதைப்பது தான், குழந்தைகளின் எதிர்காலமாக விளையும். இதற்கு முன், சிகரெட் வடிவிலான பேனா, பென்சில் உள்ளிட்டவை பயன்பாட்டிற்கு வந்தன.

மாணவர்கள் பலர், அதை ஸ்டைலாக புகைப்பது போல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவை தடை செய்யப்பட்டன. தற்போது, குழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனதில் வன்முறையை விதைக்கும் வகையில், ஆயுதங்களின் வடிவிலான எழுதுபொருட்களை நிச்சயம் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement