கேரள வனத்துறையின் அதிகாரபூர்வ பாடல் 'வனநீரு' வெளியீடு!


திருச்சூர்: கேரள வன ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் கண்ணன் வாரியர் இசையில் உருவான 'வனநீரு' பாடல், கேரள வனத்துறையின் அதிகாரபூர்வ பாடலாக வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியாக கோவையில் பணியாற்றியவர் டாக்டர் கண்ணன் வாரியர்.இவர் தற்போது, கேரளா, திருச்சூரில் அமைந்துள்ள கேரளா வன ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

வன மரபியலில் முனைவர் பட்டம் பெற்ற கண்ணன் வாரியர், 30 ஆண்டுகளாக வன ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.சமஸ்கிருதம் மற்றும் இசைத்துறையில் நிபுணத்துவம் கொண்ட கண்ணன் வாரியர், 100க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டவர்.


யஜூர் வேதத்தை அடிப்படையாக கொண்டு, சமஸ்கிருதத்தில் அவர் வெளியிட்ட 'பிராகிருதி வந்தனம்' என்ற இயற்கை தொடர்பான பாடல், சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றது.
தற்போது, கேரளா வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட 'வனநீரு' என்ற அதிகாரபூர்வ பாடலுக்கு டாக்டர் கண்ணன் வாரியர் இசை அமைத்துள்ளார்.


கேரளாவின் இயற்கை வனப்பை கொண்டாடும் வகையிலான இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மாநில கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் வெளியிட்டார்.
இவர், 2020ம் ஆண்டு வன மகோத்சவம் முன்னிட்டு, 'காடறிவு' என்ற பாடலுக்கு இசை அமைத்திருந்தார். இந்த பாடலை, மறைந்த பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் பாடியிருந்தார்.
பல்லுயிர் பல்வகைமை பாதுகாப்புக்கான ரோலா ராவ் தேசிய விருது, சிறப்பான வன ஆராய்ச்சிக்கான தேசிய விருதுகளை பெற்ற இவர், கேரள வேளாண் பல்கலையின் பி.எஸ்.சி., மற்றும் எம்.எஸ்சி., வனவியல் பட்டப்படிப்பில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement