வீட்டுக்காவலில் மார்க்சிஸ்ட் நிர்வாகி; மீட்டுச் சென்றார் திண்டுக்கல் எம்.பி.,

3


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் பாப்பாத்தியை, மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி எம்.பி., சச்சிதானந்தம் தலைமையிலான கட்சியினர் மீட்டுச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


திண்டுக்கல் சாணார்பட்டி மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் மாத சங்கத்தில் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நாளை (பிப்.28) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக தலைமைச் செயலகம் நோக்கி நடக்கும் ஊர்வலத்தில் இவர் பங்கேற்க இருந்தார்.

இதையறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார் இன்று சாணார்பட்டி மேட்டுக்கடை பகுதியில் உள்ள பாப்பாத்தியை,அவரது வீட்டில் இருந்து வெளியில் விடாமல் மதியம் 3:30 மணியிலிருந்து வீட்டு சிறையில் வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடைய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தத்திற்கு தெரிந்தது. உடனே அவர் பாப்பாத்தியும் வீட்டிற்கு வந்து அங்குள்ள போலீசாரிடம் ஏன் பாப்பாத்தியை, வீட்டு சிறையில் வைத்திருக்கிறீர்கள் சென்னையில் நடக்கும் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கும் எம்.பி, சச்சிதானந்தத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து எம்.பி., சச்சிதானந்தம் போலீசாரிடம் அத்துமீறி வீட்டு சிறையில் இருந்த பாப்பாத்தியை தனது காரில் ஏற்றி திண்டுக்கல் அழைத்து வந்தார். இதனால் போலீசார் செய்வதறியாமல் தவித்தனர்.

போராட்டத்திற்கு அனுமதி உள்ளது



திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கூறியதாவது: சென்னையில் நடக்கும் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாப்பாத்தி போலீசார் வீட்டு சிறையில் வைத்திருந்தனர். தகவல் அறிந்த நான் எஸ்.பி., பிரதீப்பிற்கு அலைபேசியில் அழைத்து பேசினேன். உடனே அவர் விசாரணை செய்கிறேன். என தெரிவித்தார். சில மணி நேரங்கள் கழித்தும் போலீசார் பாப்பாத்தியை விடுவிக்கவில்லை என தகவல் தெரிந்தது. அப்பொழுது நத்தம் சேர்வீடு பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றேன். நிகழ்ச்சி முடிந்து பாப்பாத்தையே, சந்திக்க வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்த போலீசாரிடம் சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி உள்ளது என தெரிவித்தேன். எஸ்.பி.,யிடம் தெரிவித்து விட்டேன். பிறகு ஏன் வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பாப்பாத்தியை, என் காரில் அழைத்து வந்தேன். போலீசார் என் காரை மறித்தனர் என்றார்.

மோதல் நடக்கவில்லை



திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் கூறியதாவது: முதலில் சென்னையில் முற்றுகைப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை. அதற்காக சாணார்பட்டி மேட்டுக்கடை பகுதியில் உள்ள மாதர் சங்க நிர்வாகி பாப்பாத்தி, வீட்டில் போலீஸ்காவல் போட்டிருந்தோம். பிறகு வேறு இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கொடுத்தவுடன் போலீஸ் காவலை எடுத்துக்கொண்டோம். மற்றபடி எந்த மோதலும் நடக்கவில்லை.

Advertisement