நில வகைப்பாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ., கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,

சென்னை, சென்னை பெருநகர் பகுதியில், 21 இடங்களில், தனியார் கோரிக்கை அடிப்படையில் நில வகைப்பாடு மாற்றம் செய்வது குறித்து, கருத்து கேட்பு பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.

சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம் அடிப்படையில், சர்வே எண் வாரியாக நிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், பெரும்பாலான இடங்களில், நிர்ணயிக்கப்பட்ட வகைப்பாடு சாராத கட்டுமான திட்டங்களை செயல்படுத்த உரிமையாளர்கள் விரும்புகின்றனர்.

இதற்காக, வகைப்பாடு மாற்றம் கோரி, நில உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பிக்கின்றனர்.

இந்த விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களை வகைப்பாடு மாற்றம் செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட பகுதிவாசிகளின் கருத்தை கேட்க வேண்டியது கட்டாயம்.

இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 21 இடங்களில் நில வகைப்பாடு மாறுதல் செய்வது குறித்த விண்ணப்பங்கள் மீது, 21 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

இதில், சென்னை, தி.நகரில் ஆதார குடியிருப்பு பகுதி நிலத்தை, வணிக பகுதியாக மாற்றக்கோரி, பிரபல தனியார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதேபோல், 11 இடங்களில் விவசாய பயன்பாட்டில் உள்ள நிலத்தை, குடியிருப்பு உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்கு மாற்றவும் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதில் கருத்து தெரிவிக்க விரும்புவோர், வேலை நாட்களில், எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலவலகத்தில் உள்ள கலந்தாலோசனை பிரிவை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement