பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் 'ஜிம்' உரிமையாளருக்கு 'காப்பு'

கும்பகோணம்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண் விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசிக்கிறார். கும்பகோணம் மகாமக குளம் அருகே, 'மசில் பேக்டரி' ஜிம் உரிமையாளர் பத்மகுமரன், 27, உடன் பழக்கம் ஏற்பட்டது.

இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 38 லட்சம் ரூபாயை தொழிலுக்காக வாங்கியுள்ளார். மேலும், பெண்ணிடம் பலமுறை உடலுறவு கொண்டதால், அவர் கர்ப்பமானார். கடந்த ஆண்டு அக்டோபரில் பத்மகுமரன் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண், கும்பகோணம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். பெண்ணிடம் வாங்கிய 38 லட்சம் ரூபாயை பத்மகுமரன் திருப்பிக் கொடுத்தார். மேலும், திருமணம் செய்வதாகவும் உறுதியளித்தார்.

பிப்., 23ம் தேதி, சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பெண்ணை வரவழைத்த பத்மகுமரன், கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் மனமுடைந்த பெண் தற்கொலைக்கு முயன்றார். திருவிடைமருதுார் மகளிர் போலீசார், நேற்று முன்தினம் பத்மகுமரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement