மும்பை அணி அபார வெற்றி: ரோகித் சர்மா அரைசதம் விளாசல்

ஐதராபாத்: ரோகித் சர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐதராபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐதராபாத், மும்பை அணிகள் மோதின. மும்பை 'லெவன்' அணியில் அஷ்வனி குமாருக்கு பதிலாக விக்னேஷ் தேர்வானார். ஐதராபாத் 'லெவன்' அணியில் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
கிளாசன் அரைசதம்: ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் (0), இஷான் கிஷான் (1), அபிஷேக் சர்மா (8), நிதிஷ் குமார் ரெட்டி (2) ஏமாற்றினர். ஐதராபாத் அணி 4.1 ஓவரில், 13 ரன்னுக்கு, 4 விக்கெட்டை இழந்து திணறியது.
அனிகேத் வர்மா (12) நிலைக்கவில்லை. விக்னேஷ் வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டிய கிளாசன், ஹர்திக் பாண்ட்யா வீசிய 11வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கிளாசன், 34 பந்தில் அரைசதம் எட்டினார்.
மனோகர் ஆறுதல்: பொறுப்பாக ஆடிய அபினவ் மனோகர், பாண்ட்யா வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த போது பும்ரா 'வேகத்தில்' கிளாசன் (71 ரன், 2 சிக்சர், 9 பவுண்டரி) அவுட்டானார். பவுல்ட் வீசிய கடைசி ஓவரில் அபினவ் மனோகர் (43 ரன், 3 சிக்சர், 2 பவுண்டரி), கேப்டன் கம்மின்ஸ் (1) அவுட்டாகினர்.
ஐதராபாத் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. ஹர்ஷல் படேல் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
ரோகித் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ரிக்கிள்டன் (11) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் விளாச, 17 ரன் கிடைத்தன. ஈஷான் மலிங்கா வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஜாக்ஸ். மறுமுனையில் அசத்திய ரோகித், உனத்கட், ஜீஷான் அன்சாரி பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது அன்சாரி பந்தில் ஜாக்ஸ் (22) அவுட்டானார்.
சூப்பர் சூர்யா: கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், 35 பந்தில் அரைசதம் எட்டினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், அன்சாரி வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ரோகித், 70 ரன்னில் (3 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஈஷான் மலிங்கா ஓவரில் 2 சிக்சர் விளாசிய சூர்யகுமார், அன்சாரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.
மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் (40),திலக் வர்மா (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை டிரன்ட் பவுல்ட் வென்றார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று, ஐதராபாத், மும்பை அணி வீரர்கள், அம்பயர்கள், தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்பு, மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தவிர போட்டியின் போது நடன மங்கைகளின் கொண்டாட்டம், பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.
பும்ரா '300'
ஐதராபாத்தின் கிளாசனை வெளியேற்றிய மும்பை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் தனது 300வது விக்கெட்டை (238 போட்டி) பதிவு செய்தார். இந்த இலக்கை அடைந்த 5வது இந்திய பவுலரானார். ஏற்கனவே இந்தியாவின் சகால் (373 விக்கெட், 320 போட்டி), பியுஸ் சாவ்லா (319 விக்கெட், 297 போட்டி), புவனேஷ்வர் குமார் (318 விக்கெட், 302 போட்டி), அஷ்வின் (315 விக்கெட், 331 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.