காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 68 தமிழர்கள்

1

மதுரை: காஷ்மீரில் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 68 தமிழர்கள் பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் இறந்தனர். தாக்குதல் நீடித்திருந்தால் தமிழகத்தில் இருந்து சென்ற 68 சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டிருப்பர்.

இதுகுறித்து காஷ்மீரின் ஸ்ரீநகரில் தங்க வைக்கப்பட்டிருந்த மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் நமது நிருபரிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து 25 பெண்கள் உட்பட 68 பேர் காஷ்மீருக்கு ஏப்.19ல் ஐந்து நாள் சுற்றுலா பயணமாக சென்றோம்.

நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தப்பட்ட பஹல்காம் இடத்திற்கு சில கி.மீ., துாரத்தில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்றோம். அடுத்து பஹல்காமிற்கு புறப்பட தயாரான போது, எங்களது சுற்றுலா வேன் டிரைவருக்கு அவரின் நிறுவனத்தில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு கருதி ஸ்ரீநகருக்கு அழைத்து வருமாறு கூறினர். இல்லையெனில் நாங்கள் பஹல்காமிற்கு சென்று சிக்கலில் மாட்டியிருப்போம்.இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்குதலை கேள்விப்பட்டு மதுரையைச் சேர்ந்த பாலசந்தருக்கு 60, நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர்ஸ்ரீநகரில் மருத்துவமனையில் 'அட்மிட்' செய்யப்பட்டார்.

இந்த மருத்துவமனையில்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் காயமுற்றவர்களும் 'அட்மிட்' செய்யப்பட்டிருந்தனர். நேற்று அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால் மற்றவர்களின் நிலையை வெளியே சென்று அறிய முடியவில்லை. தமிழக அரசு அறிவித்திருந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். 'நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.நாங்கள் ஏப்.23 இரவு தமிழ்நாடு திரும்ப ஏற்கனவே விமான டிக்கெட் 'புக்' செய்திருந்தோம்.

அதன்படி சிகிச்சையில் இருக்கும் பாலசந்தர் மற்றும் அவரது மனைவிக்கான டிக்கெட்டை மட்டும் ரத்து செய்துவிட்டு மற்றவர்கள் புறப்பட்டோம். இவ்வாறு கூறினார்.

நேற்றிரவு அனைவரும் சென்னை திரும்பினர்.

Advertisement