மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறக்க கோரிக்கை

நாமக்கல்: 'மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு, முன்னதாகவே நீர் திறந்து விட வேண்டும்' என, கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன பகுதிகளுக்கு, ஆக., மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம், 45,000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் கோடைகாலத்தில் உயர்ந்து வந்தது.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுவும், கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில், மிக மோசமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால், பருவ காலங்களில் ஏரி, குளம், குட்டைகளில் சேகரித்த மழைநீர் அதிக வெயில் தாக்கத்தால் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் போதிய நீர் ஆதாரம் இல்லாமல், மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். 2024ல், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் பாசனத்திற்கு, மே, 15ல் நீர் திறந்து விடப்பட்டது.
அதேபோல், இந்தாண்டும், நீர் பற்றாக்குறை காரணத்தால், முன்னதாகவே பாசனத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும். தமிழக அரசு, இவற்றை கவனத்தில் கொண்டு, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு, நீர் முன்னதாகவே திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement