மேன்ஹோல் வழியாக சாக்கடை கழிவுநீர் வெளியேறும் அவலம்

பெரியகுளம்; பெரியகுளம் வடகரை மில்லர் ரோட்டில் அடிக்கடி பாதாளச் சாக்கடை மேன்ஹோல் திறந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியில் இருந்து ஆடுபாலம் வழியாக தென்கரை வடகரை பகுதியை இணைக்கும் மில்லர் ரோடு முக்கிய பகுதியாகும்.

நகராட்சி 20 வது வார்டுக்கு உட்பட்டது. இந்த ரோடு வழியாகத்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் ஏராளமான மாணவர்கள், மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர்.

இந்தப் பகுதியில் பாதாளச் சாக்கடை செல்லும் பகுதி துார்வாராமல் அதிகளவில் மண் கிடந்தது. இதனால் மழை காலங்களில் பாதாளச் சாக்கடை செல்வதற்கு வழி இல்லாமல் மூன்று இடங்களில் மேன்ஹோல் வழியாக கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. அப்போது மாணவர்கள், மாணவிகள், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

பல மாதங்களாகியும் பணிகள் துவங்கவில்லை. தற்போது கோடை விடுமுறையால் பள்ளி விடுமுறை காலங்களில் இந்தப் பணியை துவங்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.-

Advertisement