மாதவரம் தோட்டக்கலை பூங்கா புனரமைப்பு பணி நிதி கிடைக்காததால் பணி துவங்குவதில் இழுபறி

சென்னை, மாதவரம் பால்பண்ணையில் 2018ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் 21.4 ஏக்கர் பரப்பளவில், தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு பலதரப்பட்ட மலர் செடிகள், மருத்துவ குணங்கள் கொண்ட மரங்கள் நடவு செய்யப்பட்டன. மேலும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில், பூங்காவில் உள்ள குளத்தில் படகு சவாரி துவங்கப்பட்டது.

நீண்ட நடைபாதையில் வலம் வர பேட்டரி கார் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டன. பூங்காவை சுற்றிலும், பனை மரங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றில் அழகிய வண்ணங்கள் தீட்டப்பட்டு ரம்மியமாக பூங்கா இருந்தது. கடந்த 2021ம்ஆண்டு முதல், இந்த பூங்கா பராமரிப்புக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை காலத்தில் மிக்ஜாம் புயல், பெஞ்சல் புயலால் பூங்கா சேதம் அடைந்தது. படகு சவாரிக்கு வாங்கப்பட்ட பரிசல்களும் பயனற்று வீணாகிவிட்டன.

பூங்கா பராமரிப்பு குறைந்தததால், பாம்புகள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், புதர்களின் மறைவில் காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் லீலைகளில் ஈடுபடுவதால், பலரும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இதனால், பூங்கா அமைக்கப்பட்ட நோக்கம் தடம் மாறுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பூங்காவை புனரமைக்கப்பதற்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், தோட்டக்கலைத்துறை கையில் இன்னும் நிதி வந்து சேரவில்லை.

சட்டசபை தேர்தல் காலம் நெருங்குவதால், பூங்காவை புனரமைப்பது போன்ற 'பாவ்லா' காட்டும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

கழிப்பறை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அளவீடு செய்யப்பட்டு உள்ளது. கோடை காலம் முடிந்து மழை காலம் துவங்கிவிட்டால், புனரமைப்பு பணிகளை செய்வதில் இழுபறி ஏற்படும். எனவே, ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், பூங்கா புனரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement