செவிலிமேடு பாலாற்று பாலத்தில் மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடிற்கும், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கும் இடையே செல்லும் பாலாற்றின் குறுக்கே, 20 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது.
இப்பாலம் வழியாக, பெருநகர், மானாம்பதி, உத்திரமேரூர், வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பாலத்தின் மீது, மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், இரவு நேரத்தில் பாலம் இருளில் மூழ்கியுள்ளது. மேலும், பாலத்தில் உள்ள சாலை இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இப்பாலத்தில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், இருளில் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, செவிலிமேடு பாலாறு பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.