கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

விருதுநகர்: தமிழகத்தில் உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அதன் முன்னாள் மாநில தலைவர் ராகவன், மண்டல செயலாளர் கண்ணன் அறிக்கை: கல்குவாரி உரிமையாளர்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் போன்வற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யூனிட் ஒன்றுக்கு எம்.சாண்ட் ரூ.2 ஆயிரம், ஜல்லி ரூ.1000, கிராவல் ரூ.2 ஆயிரம், பி.சாண்ட் - ரூ.3 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளனர்.

இதனால் கட்டுமான தொழிலாளர்கள், கட்டட பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வீடு கட்டும் மக்கள், அரசின் வீடு கட்டும் திட்டம், அரசு கட்டுமான வேலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கட்டுமான தொழில் முடங்கியுள்ளது.

எனவே எம்.சாண்ட், ஜல்லி கற்கள், பி.சாண்ட் விலையை குறைக்க வேண்டும்.

கல்குவாரிகளை அரசுடைமையாக்கினால் அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். மக்களுக்கும் தரமான கல்குவாரி பொருட்கள் நியாயமான விலையில் கிடைத்திடும்.

ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும், கட்டட அனுமதி கட்டணத்தை குறைக்க வேண்டும். கட்டுமான பொருட்களுக்கான 28 சதவீத ஜி.எஸ்.டி., யை குறைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement