அறநிலையத்துறை அலுவலகம் புகுந்து தாக்குதல் தி.மு.க., பேரூராட்சி தலைவி, கணவர் மீது வழக்கு

தேனி:தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் பரிவட்டம் கட்டுவதில் உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறி கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் நுழைந்து பணியாளர்களை தாக்கிய கொலை மிரட்டல் விடுத்த பேரூராட்சி தலைவி கீதா, அவரது கணவர் சசி மற்றும் உடன் வந்த சிலர் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் நாராயணி. இவர் போலீசில் அளித்த புகாரில், ‛கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் மே 9ல் தேரோட்டம் நடந்தது. இதில் கோயில் வழக்கப்படி மண்டகப்படிதாரர், மாவட்ட உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில் வீரபாண்டி பேரூராட்சித் தலைவி கீதா, அவரது கணவர் சசி மற்றும் அடியாட்களுடன் அன்று இரவு 7:00 மணிக்கு அத்துமீறி செயல் அலுவலர் அலுவலகத்திற்கு நுழைந்தனர். அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மேலாளர் பாலசுப்பிரமணியம் 59, நாதஸ்வர வித்வான் வீரமணி 44, ஆகியோரை தாக்கினர். மேலும், 'நீங்கள் ஜாதி பார்த்து மரியாதை செய்கிறீர்களா, உங்கள் அனைவரின் மீதும் பி.சி.ஆர்., வழக்குப்பதிவு செய்வேன்,' என மிரட்டினர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயில் பணியாளர்கள் புகார் வழங்கினர். வீரபாண்டி பேரூராட்சி தலைவி, அவரது கணவர் மற்றும் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

கீதா, சசி மற்றும் உடன் வந்த சிலர் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் எஸ்.ஐ., ராஜசேகரன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதில் கீதா தி.மு.க., மகளிரணி அமைப்பாளராகவும் உள்ளார்.

Advertisement