பாஸ்ட் புட்டில் மதுகுடித்தவரை அடித்துக் கொன்ற 6 பேர் கைது

நாமக்கல்:நாமக்கல், போதுப்பட்டியை சேர்ந்தவர் ஜோதிமலர், 38; இவரது மகள் நிஷாஸ்ரீ, 23; அதே பகுதியில், பாஸ்ட் புட் நடத்தி வருகின்றனர். நாமக்கல், காவேட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 55; இவரும், அதே பகுதியில் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, மதுபோதையில், பாஸ்ட் புட் கடைக்கு சென்று 'சிக்கன் ரைஸ் ஆர்டர்' கொடுத்துள்ளார். பின், கடையில் தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் டம்ளரில், தான் எடுத்து வந்த மதுவை கலந்து குடித்தார்.

இதை, ஜோதிமலர், நிஷாஸ்ரீ தட்டிக்கேட்டு, அவரை அடித்துள்ளனர். மேலும், தமிழர் தேசம் கட்சியின் நாமக்கல் நகர தலைவரான தன் கணவர் மவுலீஸ்வரன், 25, என்பவரிடம் நிஷாஸ்ரீ, அலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு தன் நண்பர் பிலிக்ஸ், 25, என்பவருடன் வந்தவர், பீர் பாட்டில் மற்றும் சிக்கன் ரைஸ் செய்ய பயன்படுத்தப்படும் கரண்டியால் ஸ்ரீதரை சரமாரியாக தாக்கினர். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். அவரை பரிசோதனை செய்த, நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து, ஜோதிமலர், நிஷாஸ்ரீ, மவுலீஸ்வரன், பிலிக்ஸ் மற்றும் இவர்கள் நால்வரும் தப்பிக்க உதவியதாக, நாமக்கல்லை சேர்ந்த கோபிநாத், 30, அடைக்கலம் கொடுத்ததாக கொல்லிமலை தின்னனுார் நாட்டை சேர்ந்த அரவிந்த், 22, ஆகிய, ஆறு பேரை கைது செய்தனர்.

Advertisement