9ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை: சிறுவன் கொடூரம்

3

ஹூப்பள்ளி: கர்நாடகாவில், ஒன்பதாம் வகுப்பு மாணவரை ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த, 15 வயது மாணவரும், இவரது எதிர்வீட்டில் வசிக்கும், ஆறாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனும் நண்பர்கள்.

தினமும் சேர்ந்து விளையாடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும், வேறு சில நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கடை போன்ற, 'செட்டப்' செய்து வியாபாரம் செய்யும் விளையாட்டு விளையாடினர். அப்போது ஏதோ காரணத்தால், ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கும், எதிர் வீட்டு சிறுவனுக்கும் சண்டை வந்து, வாக்குவாதம் நடந்தது.

கோபமடைந்த சிறுவன், தன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவரின் வயிற்றில் ஓங்கி குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த மாணவரை, அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

ஹூப்பள்ளி - தார்வாட் போலீஸ் கமிஷனர் சசிகுமார் அளித்த பேட்டி:

கொலை செய்த சிறுவனும், கொலையான சிறுவனும் நண்பர்கள். ஒரே தட்டில் உணவு சாப்பிடுவர் என, குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு, கத்தியால் குத்தி கொலை செய்யும் மனநிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த சிறுவன் என் இடுப்பு உயரம்கூட வளரவில்லை. பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement