மாநகராட்சி காய்கறி மார்க்கெட் கடைகள் புதுப்பிக்க கூடுதல் வசூல்; வியாபாரிகள் புலம்பல்
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கடைகளை புதுப்பிக்க மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக வியாபாரிகளிடம் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த மார்க்கெட்டில் 800 (8 க்கு 8) தரைக்கடைகள், 225 (8 க்கு 8) ெஷட் உடன் கூடிய கட்டட கடைகள், 16 க்கு 10 அளவில் 500 கடைகள், 20க்கு 20 அளவில் 80 கடைகளை மாநகராட்சி ஒப்பந்தம் பெற்று மாத வாடகை அடிப்படையில் வியாபாரிகள் நடத்துகின்றனர். இக்கடைகளுக்கு ரூ.1200 முதல் ரூ.10 ஆயிரம் வரை வாடகை செலுத்தகின்றனர்.
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் உரிமம் புதுப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் பெற்று உரிய கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது புதுப்பிக்கும் பணிக்காக வியாபாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ.500 கூடுதலாக பில் கலெக்டர்கள் வசூலிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது: நுாறு சதுர அடிக்குள் உள்ள கடைகளுக்கு ரூ.500, ஐந்நுாறு சதுர அடிக்குள் உள்ள கடைகளுக்கு ரூ.ஆயிரம், 1000 சதுர அடிக்குள் உள்ள கடைகளுக்கு ரூ.1500, ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் என புதுப்பித்தலுக்கான கட்டணமாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் ரூ.500 முதல் ஆயிரம் வரை கூடுதலாக செலுத்தினால் தான் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்கின்றனர். ஏற்கனவே சரியான வியாபாரம் இல்லாததால் குறைந்த வருவாய் கிடைத்துவரும் நிலையில், இவ்வாறு கூடுதலாக வசூலிப்பது மனஉளைச்சலாக உள்ளது என்றனர்.
தற்போது மாநகராட்சியில் பல்வேறு வரியினங்கள் ஆன்லைனில் செலுத்தும் நடைமுறை உள்ளது. இதுபோல் காய்கறி வியாபாரிகள் ஆன்லைன் மூலம் வாடகை செலுத்துவதும், புதுப்பிக்கும் வசதியும் நடைமுறைப்படுத்த கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.