ரோட்டோரங்களில் விற்கப்படும் அரிவாள் போலீசார் மவுனம்

திருப்புவனம் : திருப்புவனம் பஸ் ஸ்டாப்களில் வடமாநிலத்தவர் பலரும் அருவா, கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.

திருப்புவனத்தில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் பாக்யாநகர் எதிரே ரோட்டோரம் தங்கியுள்ளனர்.

ரயில்வே டிராக் அருகில் உள்ள கருவேல மரங்களை வெட்டி காயப்போட்டு கரி தயாரித்து இரும்பு பட்டறை அமைத்து அருவா, கத்தி, கோடாரி உள்ளிட்ட பல்வேறு வகையான கூர்மையான ஆயுதங்களை தயாரிக்கின்றனர்.

திருப்புவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ரோட்டோரம் கடைகள் அமைத்து ஆயுதங்களை விற்பனை செய்கின்றனர்.

கூட்டம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாப்களில் ஆயுதங்களை பரப்பி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பெண்கள், சிறுவர்கள் கைகளில் மூன்று முதல் ஐந்து அருவாக்களை வைத்து கொண்டு பஸ்களில் பயணம் செய்பவர்கள், ரோட்டில் நடந்து செல்பவர்கள் என பலரிடமும் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட அருவா தயாரிக்கும் பட்டறைகள் இருந்தாலும் ரோட்டில் கூவி கூவி விற்பனை செய்வதில்லை. பட்டறை வாசலில் அருவாக்களை வைக்க கூட போலீசார் அனுமதிப்பதில்லை.

தமிழக டி.ஜி.பி., அருவா பட்டறைகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும், அருவா வாங்க வருபவர்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் வடமாநில தொழிலாளர்கள் ரோட்டில் பரப்பி வைத்து ஆயுதங்களை விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட காவல் துறை ரோட்டோரம் ஆயுதங்களை பரப்பி வைத்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.

Advertisement