நான்கு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு தமிழ் கொரஞ்சூர் மக்கள் கடும் அவதி

மீஞ்சூர், மீஞ்சூர் ஒன்றியம் நெய்தவாயல் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ் கொரஞ்சூர் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, 3 கி.மீ., தொலைவில் உள்ள நெய்தவாயல் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.

நான்கு மாதங்களாக கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குறைந்தளவில் தண்ணீர் வருவதால் கிராமவாசிகள் சிரமப்படுகின்றனர். பெண்கள் குடிநீருக்காக நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் நிலை உள்ளது. குடிநீர் தட்டுப்பாடால், கிராமவாசிகள் அன்றாடம் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:

எங்கள் கிராமம் மட்டுமின்றி, இதே ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேடு, மவுத்தம்பேடு, கே.ஆர்.பாளையம் ஆகிய கிராமங்களுக்கும், நெய்தவாயலில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கான குழாய் ஏரியின் வழியாக செல்கிறது.

தற்போது, இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது. மாற்று வழித்தடத்தில் குழாய் அமைக்க, 38 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதை சரிவர பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி மற்றும் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீருக்காக தினமும் தவித்து வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement