மசினகுடி பகுதியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலுார்; முதுமலை மசினகுடி அருகே, மின் வாரிய கேம்ப் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை, வீட்டை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

முதுமலை, மசினகுடி அருகே, மின் வாரிய ஊழியர்கள் கேம்ப் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00மணிக்கு மக்னா யானை நுழைந்து, ரவி என்பவரின் தகர வீட்டின் ஒரு பகுதியை சேதப்படுத்தி சமையலுக்கு வைத்திருந்த அரிசி எடுத்து உட்கொண்டது.

அப்போது, வீட்டில் இருந்த ரவி மற்றும் அவரது மனைவி உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அப் பகுதியினர் உதவியுடன் யானையை அங்கிருந்து விரட்டினர். சேதமடைந்த வீட்டை வனவர் சங்கர், வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். மக்கள் கூறுகையில், 'வீட்டை சேதப்படுத்திய மக்னா யானை, ஏற்கனவே இதுபோன்று ரேஷன் கடை மற்றும் சில வீடுகளை சேதப் படுத்தி உள்ளது. சில மாத இடைவெளிக்கு பின், மீண்டும் வந்துள்ளது.

இந்த யானையால் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

மக்கள் அச்சம்



முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கூடலுார் தொரப்பள்ளி பகுதிக்கு காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, வனத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளனர்.

சில காட்டு யானைகள், இரவில், அல்லுார்வயல் பகுதி வழியாக, குடியிப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன், அதிகாலை முதுமலை வனப்பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், தொரப்பள்ளி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஒரு காட்டுயானை காலை நேரங்களில் உலாவருகிறது. பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'இரவில் குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை, மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement