பிரீமியர் லீக் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு

சண்டிகர்: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணிக்கு 229 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


சண்டிகரில் நடக்கும் பிரீமியர் லீக் 'பிளே ஆப் ' சுற்றுக்கான தகுதிச்சுற்று -2 ல் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடம் பிடித்த குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.


அந்த அணியின் துவக்க வீரர்களாக பேர்ஸ்டோ மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. ஜோனி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ரோகித் சர்மா அரைசதம்

ரோகித் சர்மா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை குஜராத் அணி வீரர்கள் தவற விட்டனர். இதனை பயன்படுத்தி கொண்ட ரோகித் சர்மா 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சூர்ய குமார் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்.திலக் வர்மா 25, நமன் திர் 9 ரன்களிலும் அவுட்டாகினர். கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் பிரஷித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


சிக்ஸர் எண்ணிக்கை 300

பிரீமியர் லீக் போட்டியில் 300 சிக்ஸர்கள் அடித்து மும்பை அணி வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

Advertisement