இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது: பாக்., பிரதமர்

11

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இனியும் பிச்சை பாத்திரத்துடன் சுற்ற முடியாது. இதனை நட்பு நாடுகள் கூட ஏற்காது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மட்டும் அல்லாமல் உலக வங்கி மற்றும் ஐஎம்எப் போன்ற சர்வதேச நிதியத்திடம் உதவி செய்யும்படி கெஞ்சியது. இதனையடுத்து அங்கிருந்து நிதியுதவி கிடைத்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் குயிட்டா நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது: பாகிஸ்தானின் அனைத்து கால கூட்டாளியாக சீனா உள்ளது. சவுதி அரேபியா நம்பகமான நட்பு நாடாக உள்ளது. துருக்கி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சுக்கும் இது பொருந்தும்.

அவர்களுடன் வர்த்தகம், வணிகம், வணிகம், புதுமை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம், முதலீடுகள் மற்றும் லாபகரமான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் இப்போது எதிர்பார்க்கிறார்கள். பிச்சை பாத்திரத்துடன் அங்கு வருவதை அவர்கள் இனியும் விரும்பவில்லை.

பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இயற்கை மற்றும் மனித வளத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொருளாதார நெருக்கடியை சுமக்கும் கடைசி நபராக, ராணுவ தளபதி ஆசிம் முனீருடன் இணைந்து நான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் இந்தியாவின் தாக்குதலால் பலத்த சேதத்தை பாகிஸ்தான் சந்தித்து உள்ளது. இச்சூழ்நிலையில், ஷெபாஷ் ஷெரீப் பேசி உள்ளார்.

Advertisement