30 ஆண்டுகள் பராமரிப்பில் பறவைகள் வலசை வரும் வீட்டுத்தோட்டம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குடும்பத்தினர்

போடி சந்தைப்பேட்டை தெரு முருகேசன். இவரது மனைவி சாந்தி. மகன் பாலாஜி. இவர்கள் வீட்டின் பின்பகுதியில் இயற்கை முறையில் வளர்த்த மனோரஞ்சிதம், ஆக்சிஜன் தரும் பவளமல்லி, பூத்துக் குலுங்கும் பூச்செடிகள், செழித்து வளர்ந்த மூலிகைச் செடிகள், பல்வகை மரங்கள் என, கடந்த 30 ஆண்டுகளாக வீட்டுத்தோட்டத்தை பராமரித்து, அதனை தேன்சிட்டு, ஸ்டிச்சிங் பேர்ட், குயில் உள்ளிட்ட பறவைகள் வலசை வந்து செல்லும் இடமாக மாற்றி, அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த தோட்டத்தில் சப்போட்டா, சீத்தா கொத்து கொத்தாய் காய்த்துள்ளன.

மன நிறைவு



பி.முருகேசன், தொழில் முனைவர், போடி: இயற்கை மீது ஆர்வம் உள்ளதால் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் செம்பருத்தி, ஹைபிஸ்கட், இப்டர் பியோ, குரோட்டன், செண்பகம், மனோரஞ்சிதம், அரளி, அடுக்கு மல்லி, அடுக்கு செம்பருத்தி, பிரம்ம கமலம், துளசி செடிகள், பாட்டில் பிரஸ், பொன் கொன்றை, சரக்கொன்றை, மஞ்சள் அரளி பூக்களும், சப்போட்டா, சீதாப்பழம், சந்தனம், தென்னை, முருங்கை உள்ளிட்ட மரங்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தினருடன் இணைந்து வளர்த்து வருகின்றேன். தினமும் காலை, மாலை நேரங்களில் செடிகளை பராமரித்து வருவதால் கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜனால் உடல் ஆரோக்கியமாக உள்ளது. பூத்துக் குலுங்கும் பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக குயில், 'ஸ்டிச்சிங் பேர்ட்', 'கம்மிங் பேர்டு' உள்ளிட்ட பறவைகள் வருவதோடு, தண்ணீர் பாய்ச்சும் போது குளித்து மகிழ்கின்றன. பெண்கள் கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயன்படுத்தி வீட்டின் முன்பாக உள்ள காலியிடம், மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைக்கலாம்., என்றார்.

இயற்கை உர பயன்பாடு



பி.எம்.பாலாஜி, ஐ.டி., துறை, போடி: வீட்டில் பூக்கள், மூலிகை, பழங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட செடிகள், மரங்கள் வளர்த்து இயற்கை முறையில் பராமரித்து வருகின்றோம். மரங்களில் இருந்து உதிரும் இலைகள், வீட்டில் பயன் படுத்தும் காய்கறி கழிவுகள், ஆட்டு சாணத்தை ஒரே இடத்தில் போட்டு மக்க வைத்து இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறோம்.

வெளியில் உரம் வாங்குவது இல்லை. இதனால் செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி, செடிகள் வளர்ச்சி அடைகின்றன.

பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக தேன்சிட்டு, மைனா உள்ளிட்ட பறவைகள் தினம் தோறும் வந்து செல்கின்றன. அருகே சென்றாலும் உடனே பறந்து செல்வதில்லை. காகங்கள் வரும் போது உணவு வழங்குகிறோம்.

பறவைகள், காகங்கள் எங்களை தவிர மற்ற நபர்கள் உணவு வழங்கினால் சாப்பிடுவதில்லை. வீட்டிற்கு வேறு நபர்கள் வந்தாலும், உடனே சப்தமிடும். அந்த அளவக்கு பறவைகளுக்கும் எங்களுக்குமான இணக்கமான உறவு நீடித்து வருகிறது.

கம்ப்யூட்டரில் அமர்ந்து பணி புரிவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. பசுமையான செடிகள், பூக்கள், பறவைகளை பார்க்கும் போது மன அழுத்தம் பறந்துபோய்விடுகிறது., என்றார்.

Advertisement