மாணவர்கள் பள்ளி செல்ல டூவீலர் வழங்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

தேனி: ''மாணவர்கள் பள்ளி செல்ல டூவீலர் வழங்கினால் பெற்றோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.'' என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று பள்ளிகள் துவங்குகின்றன. முதல் நாளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தகங்கள், உபகரணங்கள், புத்தகப் பைகள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பஸ்களில் பயணித்து வரும் மாணவர்கள் பழைய பஸ் பாஸ்கள், பள்ளிச் சீருடையில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர பள்ளிகளுக்கு அருகே உள்ள மாணவர்கள் சைக்கிள்களில் வருகின்றனர். சில மாணவர்கள் பெற்றோர்களிடம் அடம் பிடித்து, டூவீலர்களில் வருகின்றனர்.

பள்ளிகளில் டூவீலர்களை நிறுத்த அனுமதி இல்லாததால் அருகில் நிறுத்திச் செல்கின்றனர்.

சில பள்ளி மாணவர்கள் ஓட்டிய டூவீலர்களால் விபத்துக்களும் கடந்த ஆண்டுகளில் நடந்துள்ளன. பள்ளி மாணவர்கள் டூவீலர் ஓட்டி வந்தால் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

போக்குவரத்து போலீசார் சிலர் கூறுகையில், ''மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பெற்றோர்கள் டூவீலர் வழங்க வேண்டாம். பள்ளி மாணவர்களை டூவீலருடன் பிடித்தால் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.'', என்றனர்.

Advertisement