போலீஸ் செய்திகள்: தேனி மாவட்டம்

மது விற்றவர் கைது

மூணாறு: கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கூடார விளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் லெட்சுமணபெருமாள் 65. இவர், அப்பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மூணாறு நகரில் உள்ள அரசு மதுபான கடையில் இருந்து விற்பனைக்காக, மதுபானங்களை வாங்கிச் சென்ற லெட்சுமண பெருமாளை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நான்கரை லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகை திருடிய சகோதரர் கைது

மூணாறு: கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான லெட்சுமி எஸ்டேட் சவுத் டிவிஷனைச் சேர்ந்தவர் பிரவீன் 30. இவர், அதே பகுதியில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பத்து பவன் தங்க நகைகளுடன் பத்து நாட்களுக்கு முன் மாயமானார். அதுகுறித்து மூணாறு போலீசார் விசாரித்தனர். கோயம்புத்துாரில் தலைமறைவாக இருந்த பிரவீன், மூணாறுக்கு திரும்பியதும், அவரை போலீசார் கைது செய்தனர்.

மணல் திருடியவர் கைது: 8 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி. இவரது நண்பர்கள் கோமேஷ், ராஜபாண்டி, தங்க தமிழ்செல்வன், நவீன், ராஜ்குமார், முத்துச்செல்வன், பிரவீன் ஆகியோர் ஓடையில் மண் அள்ளும் வாகனத்தின் உதவியில் டிராக்டர்களில் மணல் ஏற்றினர். எருமலைநாயக்கன் பட்டி காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் ரோந்து சென்ற ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், சிறப்பு எஸ்.ஐ., சங்கர் குமார் ஆகியோர் ராஜபாண்டியை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை கைப்பற்றினர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

விபத்தில் நால்வர் காயம்

தேனி: தேனி ரத்னம் நகர் பக்கிர் மஸ்தான் 19. இவரது நண்பர் அல்லிநகரம் லோகேஸ்வரன். இருவரும் டூவீலரில் பழனிசெட்டிபட்டி வழியாக கம்பம் ரோட்டில் சென்றனர். ஊஞ்சாம்பட்டி நாகராஜன் 35, ஓட்டி வந்த ஆட்டோ டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. இதில் பக்கிர் மஸ்தான், லோகேஷ்வரன், ஆட்டோ டிரைவர் நாகராஜன், ஆட்டோவில் பயணித்த வரதராஜன் ஆகிய நால்வர் காயமடைந்தனர். மூவரும் மற்றொரு ஆட்டோ மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவர் மாயம்

தேனி : தேனி பாரஸ்ட் ரோடு பாண்டியராஜா 45. கூலித்தொழிலாளி. இவரது 14 வயது மகன் 9ம் வகுப்பில் தோல்வி அடைந்தார். இதனால் அவரை தந்தை கண்டித்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து அவரது மகன் மாயமானார். பாண்டியராஜா புகாரில் தேனி போலீசார் 14 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

Advertisement