மே மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.2.01 லட்சம் கோடி

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 16.40 சதவீதம் அதிகரித்து, 2.01 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்தாண்டு மே மாதம் வசூலான 1.72 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மே மாத ஜி.எஸ்.டி., வசூல் 16.40 சதவீதம் அதிகரித்து, 2,01,050 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது முந்தைய மாதமான ஏப்ரலில் வசூலான 2.37 லட்சம் கோடி ரூபாயை விட குறைவாகும்.

ரீபண்டு தொகையானது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 4 சதவீதம் குறைந்து 27,210 கோடி ரூபாயாக இருந்தது. இதனை சரி செய்த பின், மே மாதத்திற்கான நிகர ஜி.எஸ்.டி., வசூல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20.40 சதவீதம் அதிகமாகும்.

இறக்குமதி வரி வாயிலாக வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., 25.20 சதவீதம் அதிகரித்து 51,266 கோடி ரூபாயாகவும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் வாயிலாக வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., 13.70 சதவீதம் அதிகரித்து 1.50 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்ததன் காரணமாக, வரி வசூல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த மே மாதத்தில், தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும், 25 சதவீதம் அதிகரித்து 12,230 கோடி ரூபாயாக உயர்வை பதிவு செய்துள்ளது.



பிரிவு 2024 மே 2025 மே




சி.ஜி.எஸ்.டி., 32,409 35,434 கோடி


எஸ்.ஜி.எஸ்.டி., 40,265 43,902 கோடி


ஐ.ஜி.எஸ்.டி., 87,781 1,08,836 லட்சம் கோடி


செஸ் 12,284 12,879 கோடி


மொத்தம் 1,72,739 2,01,050

Advertisement