புதுச்சேரி பல்கலையில் நாக் கமிட்டி ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டியினர் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ம் ஆண்டு நாக் கமிட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தது. தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 'ஏ' கிரேடு தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது.மீண்டும் நாக் கமிட்டியின் அங்கீகாரம் பெற புதுச்சேரி பல்கலைக்கழகம் விண்ணப்பித்து இருந்த சூழ்நிலையில் கடந்த 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாக் கமிட்டி ஆய்வு செய்தது.

வழக்கமாக கல்வி நிறுவனங்களில் நாக் கமிட்டி குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்த முறையில் நாக் கமிட்டியினர் ஆன்லைன் மற்றும் நேரில் என இரண்டு வழிமுறைகளில் இந்த ஆய்வினை நடத்தினர்.

இரண்டு நாக் கமிட்டி குழுவினராக பல்கலைக்கழகத்தினை நேரில் ஆய்வு செய்தனர். ஐந்து நாக் கமிட்டி உறுப்பினர் ஆன்லைனில் புதுச்சேரியின் செயல்பாட்டினை கூட்டாக மதிப்பீடு செய்தனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு, பல்கலைக்கழகத்தின் கல்வி திட்டங்கள், உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி, எதிர்கால திட்டங்களை பட காட்சிகளுடன் நாக் கமிட்டியினருக்கு எடுத்துரைத்தார். பல்கலைக்கழகத்தின் அறிவு ஒளியை நோக்கி என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தரணிக்கரசு பல்லைக்கழகத்தின் புதுமையான முயற்சிகளை பட்டியலிட்டார்.

தொடர்ந்து மத்திய நுாலகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. பின் பல்கலைக்கழகத்தில் உள்ள சோலார் மின் உற்பத்தி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு மேலாண்மை வசதிகளை நேரில் ஆய்வு செய்தது.துணை ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு வர்தன், உதவி ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், சுபலட்சுமி ஆகியோர் தர முயற்சி செயல்பாடுகளை எடுத்துரைத்தனர். ஆய்வினை முடித்த நாக் கமிட்டியினர் விரைவில் அறிக்கை சமர்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு தர அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.

Advertisement