வரும் 12 வரை நடக்கும் வேளாண் வளர்ச்சி பிரசாரம்

பனமரத்துப்பட்டி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து, காரீப் பருவத்தில், வேளாண் வளர்ச்சிக்கான பிரசார முகாமை, கடந்த மே, 29ல் தொடங்கியது. வரும் ஜூன், 12 வரை நடக்கிறது.


காரீப் பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி, விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். வேளாண் சார்ந்த உயர் தொழில் நுட்பங்கள், இயற்கை விவசாயம், இடுபொருட்கள் தயாரித்தல், மண் பரிசோதனை அவசியம், வேளாண், தோட்டக்கலை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும். ட்ரோன் செயல்முறை விளக்கம், விவசாயிகளின் வயல்களில் செயல்படுத்தப்படும். இந்த முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும்.
நேற்று முன்தினம், சங்ககிரி, காடையாம்பட்டி வட்டாரத்தில் நடந்தது. 1,500க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். நேற்று வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் நடந்தது. 1,800 விவசாயிகள், பண்ணை மகளிர் பயனடைந்தனர். இத்தகவலை, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தெரிவித்தார்.

Advertisement