பயன்பாட்டில் இருந்த வாரச்சந்தைகளை மீட்க விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு :காலம் காலமாக விவசாயிகள் பயன்பாட்டில் இருந்து வந்த வாரச்சந்தைகளை, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் மனுவாக வழங்கினார்.
அதில் கூறியிருப்பதாவது:

அரசர்கள், ஆங்கிலேயர் காலத்தில் வாரச்சந்தைகள் இருந்தன. அந்தந்த பகுதி விவசாயிகள் விளைவித்த விளை பொருட்களை விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். சுதந்திரத்துக்கு பின், வாரச்சந்தை இடங்களை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் ஆக்கிரமித்து கொண்டன. பரவலாக பல இடங்களில் உள்ள பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்கள், பிற அரசு துறை கட்டடங்கள் ஆகியவை முன்பு வாரச்சந்தைகளாக இருந்த இடங்களாகும்.

தற்போது விவசாயிகள், காய்கறி, பழங்கள், தானியங்களை வீதியோரம், சாக்கடை விளிம்பு, வெட்ட வெளி, பாதுகாப்பற்ற இடங்களில் வைத்து விற்க வேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த இடத்தையும் விட்டு வைக்காமல், பல அமைப்புகள் சார்பில் சுங்கம் வசூலிக்கின்றனர்.
பஞ்சமி நிலங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள், வக்ப் வாரிய சொத்துக்கள் போன்றவற்றை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பது போல, வாரச்சந்தை இடங்களையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும். அரசே முன்வந்து, அவ்விடங்களை மீட்டு மீண்டும் வாரச்சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக மாற்றிட வேண்டும். இது விவசாயத்துக்கு புத்துயிர் வழங்கியது போன்றதாகும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement