'யூ டியூப்' பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

வேலுார் 'யூ டியூப்' பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்தவர்கள் ரித்தீஷ், 25, மற்றும் நரேஷ், 20. இருவரும் கடந்த, 2023ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக மார்த்தாண்டம், 35, என்பவர் அளித்த புகார் படி கைதாகினர். சிறையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளி‍யே வந்தனர்.
நேற்று முன்தினம் மார்த்தாண்டம் வீட்டிற்கு சென்ற ரித்தீஷ், கொலை மிரட்டல் விடுத்ததால், லத்தேரி போலீசில், மார்த்தாண்டம் புகார் அளித்தார். அதன் படி அன்று, ரித்தீஷை போலீசார் கைது செய்தனர். அந்த ஆத்திரத்தில், ரித்தீஷின் நண்பர்கள் நரேஷ் மற்றும் விக்னேஷ், 23, ஆகியோர் மார்த்தாண்டத்தின் வீட்டின் மீது, நாட்டு வெடிகுண்டு வீச, நேற்று காலை,
யூ டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தனர்.
தகவலறிந்து சென்ற லத்தேரி போலீசார், இருவரையும் கைது செய்து, அவர்கள் தயாரித்த, 3 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement