கார் கவிழ்ந்து தீப்பிடித்தது 7 பேர் காயத்துடன் தப்பினர்

மயிலாடுதுறை:சீர்காழி அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து தீப்பிடித்ததில், காரில் இருந்தவர்கள் காயத்துடன் தப்பினர்.

சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் குமார், 53; மின்வாரிய ஊழியர். இவர், விடுமுறைக்காக சென்னைக்கு வந்திருந்த தனது மகள் குடும்பத்தாரை, காரைக்கால் அருகே அம்பகரத்துாரில் உள்ள அவர்களது வீட்டில் விடுவதற்காக குடும்பத்துடன் நேற்று காரில் வந்தார்.

காரில் அவரது மனைவி வேதவல்லி, 52, மருமகன் காளிதாஸ். 35, மகள் லலிதா.33, மகன் திவாகர்.32, பேரன்கள் விஷ்வா, மாதேஸ் ஆகியோர் இருந்தனர். காரை மகன் திவாகர் ஓட்டிவந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது டீசல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் திவாகர மற்றும் லலிதா இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் 7 பேரும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement