ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பேராசிரியர் தற்கொலை

அரக்கோணம்:ராணிப்பேட்டை அருகே, ஆன்லைன் ரம்மி விளையாட்டில், 25 லட்சம் ரூபாயை இழந்த, தனியார் கல்லுாரி பேராசிரியர், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன், 42. இவர் திருத்தணியில், தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். தினகரன், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானவர்.

அந்த சூதாட்ட விளையாட்டில், 25 லட்சம் ரூபாய் இழந்தார். கடனை அடைக்க வீட்டு அடமான கடன், நகைக்கடன், தெரிந்தவர்களிடம் கடன் மற்றும் கடன் வழங்கும் செயலிகள் வாயிலாக கடன் பெற்றார். இதனால், மன உளைச்சலில் இருந்தார்.

பணியில் கவனம் செலுத்த முடியாததால், கடன் பிரச்னையை தீர்த்துவிட்டு வருமாறு கூறி, கல்லுாரி நிர்வாகம் அவரை, 'சஸ்பெண்ட்' செய்தது. இதில் மனமுடைந்து, நேற்று காலை, சித்தேரி பகுதியில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement