சாலையை கடந்த மான் லாரியில் அடிபட்டு பலி

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் காப்புக்காட்டில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

கோடை வெயில் வாட்டி வருவதால், தண்ணீர் மற்றும் இரை தேடி வரும் மான்கள் அடிக்கடி விபத்தில் சிக்கியும், நாய்களிடம் சிக்கியும் உயிரிழந்து வருகிறது.

நேற்று வியாசபுரம் காப்புக்காட்டில் இருந்து புண்டரீகபுரம் ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற ஐந்து வயது ஆண் மான், அரக்கோணம் ---- திருவள்ளூர் நான்கு வழிச்சாலையை கடந்த போது லாரியில் அடிபட்டு உயிரிழந்தது.

மான் இறந்ததை கண்டு பகுதிவாசிகள், திருத்தணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் உயிரிழந்த மானை மீட்டு, கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, அருகிலுள்ள வனப்பகுதியில் புதைத்தனர்.

இந்நிலையில், விபத்து மற்றும் நாய்கள் வேட்டையாடப்பட்டு மான்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோழவரம்



சோழவரம் அடுத்த அட்டப்பாளையம், ஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் காடுகள் உள்ளன. நேற்று சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்தில், காயங்களுடன் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது. நாய்கள் அதை விரட்டியபடி இருந்தன.

நாய்கள் கடித்து காயங்களுடன் இருந்த புள்ளிமானை, கிராமவாசிகள் கயிற்றின் உதவியுடன் பிடித்து, சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்படி வந்த வனத்துறையினரிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது. புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடப்பட்டது.

Advertisement