வெவ்வேறு சம்பவங்களில் இடுக்கியில் மூன்று பேர் பலி

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் மூன்று வேவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் பலியாகினர்.

அடிமாலி அருகே கல்லார்குட்டியைச் சேர்ந்த குட்டப்பன் 80. இவருக்கு குடும்பம் உள்ள போதும் வீட்டிற்கு சரிவர செல்வதில்லை. கல்லார்குட்டி பகுதியில் சுற்றித்திரியும் குட்டப்பன், அப்பகுதியில் கடை திண்ணை உள்பட இடங்களில் இரவில் படுத்து உறங்குவது வழக்கம். நான்கு நாட்களாக அவரை காணவில்லை என்பதால், அப்பகுதியினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் காலியாக கிடந்த வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்தபோது இடிபாடுகளில் சிக்கி குட்டப்பன் இறந்து கிடந்தார். ஏற்கனவே கட்டடம் சிறிது சேதமடைந்து காணப்பட்ட நிலையில் அதனுள் சென்று படுத்து உறங்கியவர் மீது கட்டடம் இடிந்து விழுந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி பலி: கட்டப்பனை அருகே புளியன்மலை பி.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஏலத் தோட்ட தொழிலாளி ரவீந்திரன் 58. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் ஏலத்தோட்டதில் நேற்று மதியம் 1:00 மணிக்கு மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் கீழே விழுந்தவர் பலத்த காயம் அடைந்து இறந்தார்.

குளத்தில் பிணம்: உடும்பன்சோலையை சேர்ந்த தனியார் ஏலத்தோட்டத் தொழிலாளி லாவன்யா 27. இவர், மே 26ல் மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை.

அவர், உடும்பன்சோலை அருகே ஆட்டுப்பாறை பகுதியில் தனியார் ஏலத்தோட்டத்தில் குளத்தில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை நேற்று பார்த்தனர். உடும்பன்சோலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement