வங்கதேசத்தில் ஏப்ரல் 2026ல் தேர்தல்: குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த யூனுஸ்

1

டாக்கா: வங்கதேசத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார்.



இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு பார்லிமெண்ட் கலைக்கப்பட்டது.


பின்னர் ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது. அங்கு இந்தாண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவ தலைவர் வேக்கர் உஸ்ஜமான் அழைப்பு விடுத்திருந்தார்.


ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்தலை உடனே நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக் கொள்ள யூனுஸ் விரும்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இந் நிலையில், 2026ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என்று யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:


2026 ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் எந்த நாளிலும் தேர்தல் நடைபெறும் என்பதை நாட்டு குடிமக்களுக்கு நான் அறிவிக்கிறேன். தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று கூறி உள்ளார்.

Advertisement