ரூ.45 லட்சம் வெகுமதி: இருமாநிலங்கள் தேடிய இன்னொரு நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை

ராய்ப்பூர்: ரூ. 45 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் சத்தீஸ்கரில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திரவதி தேசிய பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக நக்சல் ஒழிப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.


நீண்ட நேரம் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூடு நின்றவுடன், நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை நோக்கி பாதுகாப்புப் படையினர் சென்றனர். அங்கு நக்சலைட் ஒருவனின் சடலமும், அருகில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் சிதறிக் கிடந்தன.


சடலத்தை மீட்ட பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தினர். அதில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நபர் நக்சலைட் இயக்கத்தின் மூத்த தலைவன் பாஸ்கர் என்பது தெரிய வந்தது. இவனை பிடித்துக் கொடுத்தால் தெலுங்கானா மாநிலத்தில் ரூ.20 லட்சம், சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


முன்னதாக நக்சலைட் இயக்கத்தின் மற்றொரு முக்கிய தலைவனான சுதாகர் என்கிற நரசிம்மசலம் என்பவன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இவனது தலைக்கு ரூ.40 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement