பாதாள சாக்கடையில் தவறி விழுந்த தூய்மை பணியாளர் பலி

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்றிய போது, தவறி விழுந்து விஷ வாயு தாக்கியதில் ஒப்பந்த தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி பாதாள சாக்கடை கழிவு நீர் பிரதான சாலைகள் முக்கிய வீதிகளில் வெளியேறி வருகிறது. இதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவு நீரை உறிஞ்சும் வாகனம் மூலம் கழிவு நீரை அகற்றி வருகின்றனர்.


இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புள்ள சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறியுள்ளது. கழிவு நீர் உறிஞ்சி வாகனம் மூலம் கழிவு நீரை வெளியேற்ற கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ஒப்பந்த தூய்மை பணியாளர் மணி(40). உட்பட நான்கு பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அப்போது மணி கழிவுநீரை உறிஞ்சும் பைப்பை பாதாள சாக்கடைக்குள் செலுத்தும் போது தவறி உள்ளே விழுந்தார். இதனையடுத்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாதாள சாக்கடைக்குள் தலை கீழாக மயங்கிய நிலையில் கிடந்த மணியை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


அங்கு பரிசோதித்த மருத்துவர் கழிவு நீரில் உள்ள விஷ வாயு தாக்கியதில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement