சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மீண்டும் ஒத்தி வைப்பு

புதுடில்லி:சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணிக்கும் ராக்கெட் ஏவுதல், வானிலை காரணமாக நாளை மறுதினம் ஜூன் 11 மாலை 5.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.
'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக நாளை (ஜூன் 10) இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த பயணம் மோசமான வானிலை காரணமாக, ஜூன் 11, 2025 அன்று இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.